அலங்காநல்லூர், ஆகஸ்ட் 28 –
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திரளி கவுண்டர் சோனை வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீலைக்காரி அம்மன், ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் வாஸ்து பூஜைகள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று இரண்டு கால யாகவேள்வி பூஜைகளுடன் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் சுவாமி சிலைகள் மீது புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அ.மீனாட்சிபுரம், முடுவார்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.



