மார்த்தாண்டம், ஆக. 26 –
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது கடந்த 2022 ஆம் ஆண்டுமுதல் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையுடன் இனைந்து செயல்படுத்திவருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையை விதைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் யுனிசெப் நிறுவனமானது அறிவுசார் பங்குதாரராக இனைந்து செயல்படுகிறது.
ஆண்டுதோறும் மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு அவர்கள் கண்டறியும் புத்தாக்க சிந்தனைகளுக்கு ருபாய் 25000 முதல் ஒரு லட்சம் வரை 60 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியானது கருங்கலில் நடந்தது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேர் வீதம் மொத்தம் 200 ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் பள்ளிகளை எப்படி இணையதளத்தில் பதிவு செய்வது, பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் குறித்து எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையதள கற்றலை எவ்வாறு நிறைவு செய்வது, புத்தாக்க சிந்தனைகளை எப்படி உருவாக்குவது, அதனை இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு பெத்லகேம் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்மி பிரேமா, மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் ஆண்டாள் அலெக்சு வேணி ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் ராஜேஷ் செய்திருந்தார்.



