வேலூர், ஆகஸ்ட் 25 –
அருண் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கல்லூரி ஆண்டு விழா, கலைவிழா என முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வி.எஸ். விஜய் தலைமை தாங்கி பேசுகையில், அருண் கல்வி அறக்கட்டளை 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன்கீழ் அருண் நர்சிங் கல்லூரியும், 2012ம் ஆண்டு அருண் பாராமெடிக்கல் கல்லூரியும் தொடங்கப்பட்டது. நான் அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 450 நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான ஆணை தமிழ்நாட்டில் மருத்துவ தேர்வு வாரியம் தொடங்கியது. தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த நர்சிங் மாணவர்களும் அரசு பணியில் சேர முடியும் என்பதற்கான ஆணைகள் இன்றளவும் இயங்கிவருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கலந்து கொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: செவிலியர் பணி என்பது வேலை இல்லை. அது ஒரு உன்னதமான சேவை. நீங்கள் வேலை மனப்பான்மையுடன் பணி செய்யக்கூடாது. செவிலியர் பணியில் பரிவு, கனிவு தேவை. இது இல்லை என்றால் செவிலியர் பணி சிறக்காது. டாக்டர்களுக்கு இணையான சேவையை செவிலியர்கள் செய்கின்றனர். உங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், நோயாளிகளிடம் செல்லும்போது அதனை எல்லாம் மறந்து தாயுள்ளத்தோடு அவர்களுக்கு பணி செய்ய வேண்டும்.
மற்ற வேலைகளை விட செவிலியர் பணியில் தான் பொறுப்பு அதிகம். இந்திய செவிலியர்களுக்கு உலகம் முழுவதும் தேவை இருக்கிறது. உங்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலைக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்டர்நெட்டில் நல்லதும், கெட்டதும் உள்ளது. அதில் நீங்கள் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் போதெல்லாம் இன்டர்நெட் வசதி இல்லை. இப்பொழுது அதனை உங்களுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து நடந்த கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஏ4 மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கண்ணைக் கவரும் வகையில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அருண் மருத்துவமனை தலைவர் டாக்டர் அருண்குமார், டாக்டர்கள் கீர்த்தி, வசந்த்குமார், அனிதா அறங்காவலர் ஜெயந்தி விஜய், கல்லூரி முதல்வர்கள் சுனிதா, கலைச்செல்வி, திலகவதி, நிர்வாக அலுவலர் சாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



