கிருஷ்ணகிரி, ஆக. 22 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, கீழ்மைலம்பட்டி கிளைக் கழகத்தைச் சேர்ந்த கழகத்தின் தீவிர விசுவாசி திரு. தங்கராஜ் கடந்த 12.8.2025 அன்று பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயண பிரச்சாரத்தில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார்.
கழக தொண்டர் தங்கராஜ் அவரது இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்த அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தங்கராஜ் குடும்பத்திற்கு அதிமுக கழகம் சார்பில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கொடுத்து வழங்கிய ரூபாய் 10 லட்சம் இழப்பீடு பணத்தினை இன்று புளியம்பட்டியில் உள்ள தங்கராஜ் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக கழக கொள்கைப்பரப்பு செயலாளர் மாநிலங்கள் அவை உறுப்பினர் தம்பிதுரை M.P. அவரது குடும்பத்தாரிடம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் வேலையின்றி இருந்த உயிரிழந்த தங்கராஜ் அவரது மருமகள் வனிதாவுக்கு போச்சம்பள்ளியில் உள்ள பிரபல வேளாங்கண்ணி தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கியும் தங்கராஜ் அவரது பேரக்குழந்தைகள் 3 பேருக்கு அதே பள்ளியில் உயர்கல்வி வரை படிக்க முழு கல்வி செலவையும் கழகத்தின் சார்பில் வழங்கினார்.
இதேபோல் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி சார்பில் இந்த விபத்தில் காயமடைந்து போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை அவர் பார்வையிட்டு இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணம் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் விபத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிலரையும் தம்பிதுரை M.P. அவர்கள் சந்தித்து நிதியுதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவிச்சந்திரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் வெற்றிசெல்வம், முன்னால் பஞ்சாயத்து தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



