சிவகங்கை, ஆக. 22 –
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ராமநாதபுரம் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மற்றும் சிவகங்கை மாவட்ட திட்டப் பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் (ம) வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று 31.3.2015 ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசாணை எண். 116, நாள்: 04.08.2025-ன் படி வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி போன்ற வட்டி தள்ளுபடி சலுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 31.3.2015 ஆம் தேதிக்கு முன்னர் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து, ஒரே தவணையில் தொகையினை செலுத்தி, குறிப்பிட்டுள்ள வட்டி சலுகை திட்டத்தின் மூலம் பயன்பெற்று கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே தவணைத் தொகை சரிவர செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் இச்சலுகையினை பயன்படுத்திக் கொண்டு வருகின்ற 31.3.2026 ஆம் தேதிக்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.


