பரமக்குடி, ஆக. 18 –
பரமக்குடியில் முதுகலைத் தமிழாசிரியர் அவையத்தின் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ச. கர்ணன் தலைமை வகித்தார். ஜெ. ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச. பாண்டியன், மான மதுரை அரசு கல்லூரியின் முதல்வர் பேரா. கோவிந்தன், ஆயிரவைசிய சபையின் தலைவர் பாலுச்சாமி, பள்ளித்தாளாளர் சதீஸ்குமார், முன்னாள் திட்ட இயக்குநர் கோ. கருப்புச்சாமி, முன்னாள் மாவட்டப் பதிவாளர் சு. பாலு, போகலூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் லோகிதாஸ், AlATA ஆசிரியர் அமைப்பின் மாநிலத் தலைவரான தலைமையாசிரியர் பாரதிராஜன், வழக்கறிஞர் பசுமலை, தலைமையாசிரியர்களான ஜஸ்டின் ஞானசேகரன், தர்மராசு, வேணி ரெத்தினம், ஆசிரியர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் SR. காளிதாஸ் போன்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் 91 வயது நிறைவடைந்த மூத்த பேராசிரியர் பொ.ந. கமலா (சிவகாசி) அவர்களுக்கு தொல்காப்பியர் விருதும், முனைவர் தாமரை (திருச்சி) அவர்களுக்கு திருவள்ளுவர் விருதும் வழங்கப்பட்டது. தொல்காப்பியம், திருக்குறள் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையும், +2 பொதுத்தேர்வில் தமிழில் முதன்மை மதிப்பெண் பெற்ற 61 மாணவர்களுக்கும், 30 ஆசிரியர்களுக்கும் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அவையத்தின் நோக்கம் குறித்து ஆ. உதயகுமார் விளக்கினார். இவ்விழாவில் விருது, கேடயம், பாராட்டுச் சான்றிதழ் போன்றவற்றை வழங்கி விழாப் பேருரையாற்றிய சோ. தர்மன் மாணவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற வேண்டும். சூழல்களைத் தமக்கு சாதகமாக மாற்றப் பழக வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வாசிப்பு கட்டாயம் தேவை. சரியான வாசிப்புப் பழக்கமே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும். தன்னம்பிக்கை கொடுக்கும். சமூகத்தின் பெருமையைப் பெற எழுத்துப்பணியில் 45 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இதன் விளைவுதான் சாகித்திய அகாதெமி விருது, பெருமை எல்லாமே என்று பேசினார். சேது பழனி, நாகராஜன் போன்றோர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினர். அவையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் விழாவை ஒருங்கிணைப்பு செய்தார். மணிமொழி நன்றி கூறினார்.



