சென்னை, ஆக. 16 –
பள்ளி காலம் தொட்டே தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட ஐ. பெரியசாமி முதன் முதலில் வத்தலகுண்டு ஒன்றியத் தலைவரானார். 1989 தேர்தலில் முதன் முறையாக ஆத்தூரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்வானார். எம்.எல்.ஏ ஆன பிறகு நடைபெற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலில் மாயத்தேவர் முத்துசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
1996ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன் முறையாக அமைச்சராக பதவி ஏற்றார். அழகிரியுடன் நெருக்கம் காட்டி வந்தாலும் 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகு முழுக்க முழுக்க மு.க. ஸ்டாலின் ஆதரவாளராக மாறினார். 2021-ம் ஆண்டு தேர்தலில் வென்று முதலில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார்.
2006-2011 அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீது வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு உள்ளது. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் தற்போது ரெய்டு நடைபெறுகிறது.



