பரமக்குடி, ஆக. 6 –
காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பரமக்குடி நகர் பகுதியில் உள்ள காட்டுபரமக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அம்மனுக்கு முளைப்பாரி விழா நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் 10-ம் தேதி முதல் பத்து நாள் திருவிழா தொடங்கியது.
முத்துமாரியம்மன் கோயில் திண்ணையில் தினந்தோறும் பெண்கள் கும்மியடித்து இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடினார்கள். அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனை, சிறப்பு வழிபாடும் நடந்தது. இறுதி நாளான நேற்று காலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். மாலையில் முளைப்பாரி எடுத்து காட்டுப் பரமக்குடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்து கும்மியடித்தனர்.
பின்னர் முத்தையா கோவில் படித்துறையில் வைகை ஆற்றில் கரைத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை காட்டுபரமக்குடி பொதுமக்கள், மகளிர் மன்றம், முத்தையா கபாடி குழு இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.



