நாகர்கோவில், ஜூலை 10 –
தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடந்தது. இருப்பினும் நாகர்கோவிலில் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் வழக்கம்போல் ஓடின. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஒன்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் நேற்று காலை முதல் வழக்கம் போல் இயங்கின. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் இருந்து பஸ்கள் நாகர்கோவில் வரவில்லை. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தது. இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைம், வேப்ப மூடு சந்திப்பு, தலைமை தபால் நிலையம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம், நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம், குளச்சல் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ்., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏஐடியுசி, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. குமரி மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் இயங்கின.