நாகர்கோவில், ஜூன் 26 –
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடைக்காக தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடைப்புகளை கண்டறியும் வகையில் மேன் ஹோல்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட மேன்ஹோல்கள் மாநகரில் உள்ளன. குழாய்கள் பதிக்கப்பட்ட மற்றும் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்ட சில இடங்களில் அவ்வப்போது சாலையில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடைக்கான மேன்ஹோல் அருகில் சாலையில் உடைப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் உருவாகி உள்ளது. இதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் பிளாஸ்டிக் ட்ரம் கொண்டு வந்து அந்த பள்ளத்தின் மேல் பகுதியில் வைத்தனர். மேலும் மரக்கிளைகளையும் வைத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்த இடங்களில் முறையாக குழிகள் மூடப்படாமல் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சாலைகளில் உடைப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள வாட்டர் டேங்க் ரோட்டில் ஏற்கனவே 2, 3 முறை சாலைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சாலை உடைப்பு, திடீர் பள்ளங்கள் உருவாகி வருவதும் அதை தற்காலிகமாக சிமெண்ட் கலவை வைத்து பூசுவதும் வாடிக்கையாக உள்ளது.
எனவே நிரந்தர தீர்வு காணும் வகையில் முறையாக சாலைகளை ஆய்வு செய்து அதன் பின்னர் உடைப்பை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் சாலை அமைக்கப்பட வேண்டும் என்றனர். வாட்டர் டேங்க் ரோடு மிகவும் முக்கியமான சாலை ஆகும். இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதம் ஏற்படவில்லை.