மார்த்தாண்டம், ஜூன் 24 –
மார்த்தாண்டம் ஜே.சி.ஐ அமைப்பு சார்பில் இலவச ரத்ததான முகாம் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஆகியவை ஆற்றூர் சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹாலில் வைத்து நேற்று நடைபெற்றது. ஜேசிஐ தலைவர் அனுசியா ஜாண் அனைவரையும் வரவேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் தயக்கம் இருந்து வருகிறது. இளைஞர்களிடம் சமூகக் கடமையும் பொறுப்பும் உள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறான முகாம்களில் இளைஞர்களை ஊக்கப்படுத்திக் கொண்டுவர முன் வரவேண்டும். இதற்காக ஜேசிஐ தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஜேசிஐ அமைப்பின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 1915-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இளைஞர்களின் திறமை மற்றும் முன்னேற்றத்திற்காக தங்களை தயார்படுத்திக் கொள்வது சிறப்பு மிக்கது. இன்னும் 40 வயதிற்கு மேற்பட்ட அதிகப்படியான இளைஞர்களை சேர்த்து தனது தனித் திறமைகளை வளர்த்து
மக்கள் பணிகளை, மக்கள் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார். இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்ய இளைஞர்களை ஏற்பாடு செய்திருந்த தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். போதகர் கிறிஸ்டோபர் இயேசு மணி, ஜேசிஐ அமைப்பைச் சேர்ந்த சிவராம் குமார், டாக்டர் ராகேஷ் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள். நிகழ்ச்சியில் காங்கிரஸ் அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரத்னகுமார், திருவட்டார் வட்டாரத் தலைவர் ஜெபா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தங்கநாடார் மற்றும் ஷிபி, பிரகாஷ்குமார், ஷர்கின், ஜே.சி. அந்தோணி, அனூஜ் மோன் செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.