நாகர்கோவில், ஜூன் 21 –
தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் அசோசியேசன் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் சங்கத் தலைவர் சங்கரன், செயலாளர் காமராஜ் ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை தான் உற்பத்தி செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருள்களின் தடையை விளக்கக் கோரி எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. இந்த வழக்கில் கடந்த 31-1-2024 இடைக்கால உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் பல்வேறு மாவட்டங்களில் புதிய மற்றும் ஏற்கனவே நடந்து வரும் நிறுவனங்களுக்கு மீண்டும் புதிய அனுமதி மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பறிமுதல் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடவடிக்கை மேற்கொண்டு பொருட்களைப் பறிமுதல் செய்து வியாபாரிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.