ஈரோடு, ஜூன் 21 –
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும் இளைய தலைமுறையினரிடையே நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டு சேர்க்கவும் அரசின் அறிவிப்பு திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு இசைக் கல்லூரிகள், மண்டலக் கலை பண்பாட்டு மையங்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் என மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் தப்பாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம் ஆகிய நாட்டுபுறக் கலைகளில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டு ஓராண்டின் முடிவில் தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும். ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நாட்டுப்புறக் கலை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 17 வயது முதல் வயது முதிர்வு வரை மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் அடுத்த மாதம் 1 ந் தேதி முதல் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். இப்பயிற்சி குறித்த விவரங்களையும் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தினையும் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோடு, ஈரோடு-638005 என்ற முகவரியிலும் அல்லது தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.