திருப்பூர், ஜூன் 19 –
திருப்பூர் எஸ்.ஆர் நகர் வடக்குப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப் பிரியர்கள் தொல்லை அதிகரிப்பதுடன் பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நொய்யல் புதுச்சாலையில் அமர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கையெடுத்து கும்பிட்டுத் தங்களுக்கு இந்தக் கடை வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்டனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய முறையில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். எனினும், கடை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.