கிருஷ்ணகிரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
திருச்சியில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத சார்பின்மையை காப்போம் என்ற மக்கள் எழுச்சிப் பேரணி வரும் ஜூன் 14ல் நடக்க உள்ளது. இப் பேரணிக்கு செல்வது குறித்து வி.சி., கட்சியின் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் செயற்குழுக் கூட்டம் தேவசமுத்திரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மாதையன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் தியாகு தலைமை வகித்தார். மேலிடப் பொறுப்பாளர் ஜெயந்தி, மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன், மண்டல துணை செயலாளர் மோகன், ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் தமிழ்மணி, மகளிர் அணி மாநிலை அமைப்பாளர் ஜெயலட்சுமி, மாவட்ட பொருளாளர் முனிராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மைய மாவட்டத்தில் ஒருங்கிணைந்த செயற்குழுக் கூட்டம் நடந்தது. மத்திய அரசு நடைமுறைப்படுத்திய வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக மதச்சார்பின்மைக் காப்போர் என்ற பேரணியை வி.சி., கட்சியின் சார்பில் நடத்த உள்ளோம். மதச்சார்பின்மை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தால் பாதுகாக்கும் ஒன்று. இந்த நாட்டை அரசியல் அமைப்பு சட்டம் வழிநடத்தி செல்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் மத்திய அரசு வக்ஃபு வாரிய திருத்த சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. தமிழக முதல்வர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு யாருக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டார். பா.ம.க., தி.மு.க., கூட்டணிக்கு வருவது அவர்களுடைய விருப்பம். ஆனால் இதில் தி.மு.க., உள்பட யாருக்கும் விருப்பம் இல்லை. பா.ம.க.,வின் செயல்பாடுகள் என்பது எல்லோருக்கும் தெரியும். கூடா நட்பு கேடாய் முடியும். யாருடன் அவர்கள் சேர்ந்தார்களோ, அவர்களாலேயே அந்த கட்சி இரண்டாக பிளக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கவில்லை. அதற்குள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மற்ற கட்சித் தலைவர்களை ஒருமையில் விமர்சிக்கின்றனர். ஆதவ் அர்ஜூனின் அணுகுமுறையால்தான் அவராகவே எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது த.வெ.க.,வில் உள்ளார். நாங்கள் விஜய்க்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறோம். ஆதவ் அர்ஜூனிடம் எச்சரிக்யைாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து தொழிற்சங்க மாநில அமைப்பாளர் பொன்னுசாமி, நிர்வாகிகள் அம்பேத்வளவன், சசிகுமார், ரகு, ஜெகன், பீமா மணி, பிரதாப், மாது, ரஜினி, சரவணன், சந்தீஷ், கணபதி, ராஜேஷ், சாமுவேல், வேலு, லட்சுமணன், ராஜேந்திரன், சக்தி, காதர் , அருண், கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சரவணன் நன்றி கூறனார்.
–––––––––



