தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கென பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளுக்கு உதவிக்கு வரும் நபர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூ.1.25 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்பிட கட்டிடத்தினையும், சுரண்டை நகராட்சியில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தினையும், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் மூலம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருராட்சி அலுவலக கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்கள்.
நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், செங்கோட்டை நகராட்சி சுப்பிரமணியபுரம் உரக்கிடங்கில் ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், பண்பொழி பேரூராட்சியில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கும், இலஞ்சி முதல்நிலை பேரூராட்சியில் மூலதன நிதி மான்யம் திட்டம் 2024- 2025 – இன் கீழ் ரூ. 3.72 கோடி மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரத்தினை மேம்படுத்துதல் திட்டத்திற்கும், ஆழ்வார் குறிச்சி பேரூராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பிட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் பல்வேறு திட்டங்களைத் திறந்து வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மண்டல இயக்குநர் (நகராட்சிகள்) விஜயலெட்சுமி, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், இணைஇயக்குநர் (நலப்பணிகள்) பிரேமலதா, மண்டல செயற்பொறியாளர்(நகராட்சிகள்) சணல்குமார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி, தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுரண்டை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன், தென்காசி நகராட்சி பொறியாளர் ஹசீனா, உதவி செயற்பொறியாளர் பிரியா, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூராட்சிமன்ற செயல் அலுவலர் குமார்பாண்டியன், வடகரை கீழ்பிடாகை செயல்அலுவலர் அமானுல்லா , வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிமன்ற தலைவர் ஷேக்தாவூது, பண்பொழி பேரூராட்சிமன்ற தலைவர் இராஜராஜன், பண்பொழி பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லாபாய் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.