நிலக்கோட்டையில் பிரதான சாலையில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ நடராஜர் திருக் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் இன்று வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் சிவாச்சாரியர்கள் தலைமையில் கும்பங்களுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
யாகசாலையில் உலக நன்மை வேண்டி அனைத்து மதத்தினரும் நன்மை பெறும் விதமாக வசோர் தாரா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
கோவில் வெளி பிரகாரத்தில் உள்ள நடராஜர் சுவாமிக்கும் பல்வேறு வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கருவறையில் அருள்பாலிக்கும் நடராஜர் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு செய்து கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நடராஜர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பின்னர் நடராஜர் சுவாமிக்கும், நந்திக்கும் தீபாராதனை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நடராஜரின் திருவருள் பெற்றனர்.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.