நாகர்கோவில் – மே
– 30,
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி அளிக்கும் வகையில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 ஆகஸ்ட் 26 ல் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன்படி சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கிடு அளிக்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும். இதற்கான 60% நிதியினை மத்திய அரசும் 40% நிதியினை மாநில அரசும் ஒதுக்கீடு செய்யும்.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 7738 தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 முதல் மத்திய அரசு இத்திட்டத்திற்கென வழங்க வேண்டிய ரூ617 கோடி நிதியினை வழங்காத நிலையில் முழுத்தொகையினையும் மாநில அரசே ஏற்று வழங்கிவருகிறது. இத்திட்டத்திற்கென வருடந்தோறும் ஏப்ரல் தொடங்கி மே முடிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதனால் இதனை எதிர்நோக்கி உள்ள மாணவ மாணவிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதுடன் செய்வதறியாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றனர்.புதிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம்.ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாத நிலையில் சமக்ர சிக் ஷா (எஸ்.எஸ்.ஏ)திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ2.291கோடி கல்வி நிதியினை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியினை வழங்காமல் மாணவ, மாணவிகளின் கல்வி உரிமையினை பறிக்கும் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு தங்கள் கொள்கைகளை திணிப்பது மாநில உரிமைகளுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். எனவே மக்களாட்சி மாண்பை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியினை மேலும் தாமதம் செய்யாமல் உடனே வழங்கிட வேண்டும்.



