நாகர்கோவில், மே 30:
ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்ய இன்று (30ம் தேதி) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் சுமார் 5 லட்சத்து 81 ஆயிரத்து 357 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 149 உள்ளன. இதன் மூலம் 10 லட்சத்து 5 ஆயிரத்து 400 பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். முன்னுரிமை குடும்ப அட்டைகளில் பி எச் எச் வகை குடும்ப அட்டைகள் 2 லட்சத்து 31 ஆயிரத்து 647 உள்ளன. இதில் மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 740 பயனாளிகள் உள்ளனர். அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் 60 ஆயிரத்து 520 எண்ணம் உள்ளன. இதில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 664 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
முன்னுரிமை பெறும் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு அதன் அடிப்படையில், ஏஏஓ வகை குடும்ப அட்டை பயனாளிகளில் மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 61 நபர்களும், பிஎச்எச் வகை குடும்ப அட்டை பயனாளிகளில் 6 இலட்சத்து 49 ஆயிரத்து 843 நபர்களும் ஆக மொத்தம் 8 லட்சத்து 45 ஆயிரத்து 904 நபர்கள் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.
ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்களாக இன்னும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டி உள்ளது. இந்த பணி மே 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் இதுவரை தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யாத நபர்களின் பட்டியல் வழங்கப்பட்டு கடைகளில் வெளியே ஒட்டப்பட்டுள்ளது இது தொடர்பாக களம் விசாரணைகளும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ஏஏஓ மற்றும் பிஎச்எச் முன்னுரிமை குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்கள், உடனடியாக தங்கள் நியாய விலை கடையிலோ, அல்லது வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருக்கும் பயனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடையிலோ சென்று தங்கள் கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்து குடும்ப அட்டையில் இருந்து தங்கள் பெயர் நீக்கம் செய்யப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.