மாத்தான்டம், மே.23 –
நித்திரவிளை அருகே கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (31). கொத்தனார். இவரது தங்கையிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் பிரச்சனை செய்துள்ளார். இதை சுபாஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் இரவு சுபாஷ் பூத்துறை பகுதியில் உள்ள மஞ்சத்தோப்பு முருகன் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜேஷ் மற்றும் பிரபு (37), வினு (27), வினித் (30) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுபாஷை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுபாஷ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.