திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (19.05.2025) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தி.வ.மலை மே 20
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கி வருகிறார்.
அதன்படி இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறைசார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 802 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெறுவதோடு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி இன்று செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 46 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 33 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள் நவீன செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு 14 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.12,11,300/- மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜசேகரன், உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார், திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம் கலைசெல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



