சுருளகோடு ஊராட்சியில் அனந்தனார் கால்வாய் செல்கிறது. இதிலிருந்து உல்லிமலை மறுகால் ஓடை செல்கிறது. புத்தனார் அணையிலிருந்து 2 கி.மீட்டர் தொலைவிலும் குறிப்பாக பாண்டியன் கால்வாயிலிருந்து அனந்தனார் கால்வாய் வருகின்ற பகுதியிலிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள பகுதயில் இவ்உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் இதனை சரி செய்யும் பொருட்டு அனந்தனார் கால்வாயிலிருந்து உல்லிமலை ஓடைக்கு அடிமடை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட தளவாய் சுந்தரம் பின்னர் தெரிவிக்கையில்,
ஆண்டு தோறும் பேச்சிப்பாறை அணை ஜுன் 1-ம் தேதி திறக்கப்பட்டு வருகிறது. அணை திறக்கப்படுகின்ற நேரத்தில் ஆண்டு தோறும் குறிப்பாக கடந்த ஆண்டில் தோவாளை சாணலில் துவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பயிர் செய்ய குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் 8 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொருளாதார ரீதியில் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதைப் போன்று நடப்பாண்டில் மேற்கூறிப்பிட்ட பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆண்டு தோறும் இந்த அவல நிலை தொடர்கிறது. இது போன்ற நிலைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய நீர்வளத்துறை முன் கூட்டியே எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
உடைப்பினை சரி செய்யும் பணிகளை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக விரைவில் முடித்திட வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விவசாயிகளின் நலன்கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக கால்வாய் உடைப்புகளை சரி செய்தல் மற்றும் கால்வாய்களை தாமதமின்றி தூர் வாருதல் போன்றவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்.
மேலும் தற்போது கால்வாய் உடைப்பை சரி செய்யும் பணிகள் ரூ. 1 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் அனந்தனார் கால்வாய் மூலம் பயன் பெறும் சாகுபடிக்கு தற்போது தண்ணீர் விட முடியாத சூழ்நிலை இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அலுவலர்கள் பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விரைவில் முடிப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
என அவர் தெரிவித்தார்.
உடன் தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் அருமநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேஷ் (எ) வேலாயுதம்பிள்ளை, ஆகியோர் இருந்தனர்.



