தென்தாமரைகுளம், ஜன. 10 –
ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா லூயிஸ் மேரி. இவருக்கு தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை உள்ளது. இந்த தும்பு ஆலையில் நேற்று அதிகாலை திடீர் என்று தீப்பிடித்துள்ளது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மள மளவென்று பிடித்து அந்த பகுதி முழுவதும் பரவிவுள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. அங்கிருந்தவர்கள் உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
இருப்பினும் தும்பு ஆலையில் இருந்த கயிறு பண்டல்கள் மற்றும் குவித்து வைக்கப்பட்டிருந்த தும்புகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. இதனால் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.



