ஈரோடு ஏப். 4
வழக்கமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல் வேறு இடங்களுக்கு சென்று அங்கு உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்து வருகிறார்.
இப்போது ஈரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலேயே மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வழங்கல் அலுவலகம், தனித்துணை ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது அங்கு உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கும் முறை மற்றும் தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை அச்சிட்டு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள மனுக்களின் தற்போதைய நிலையினை இணையதளத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்டார். நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னி உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை குறித்த மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் முகவரி இணையதளத்தில் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார். தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதன் பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வனஉரிமை சட்டம் மூலம் வழங்கப்பட்டு வரும் பட்டா மற்றும் இலவச தையல் இயந்திரம் குறித்து கேட்டறிந்தார். அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலலயே மாவட்ட ஆட்சியர் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



