ஈரோடு ஏப். 3
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி 46 புதூர் லக்காபுரம் பகுதியில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று மதிப்பு கூட்டப்பட்ட காளான் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் ‘குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021″ன் கீழ் மதிப்புகூட்டப்பட்ட உலர்ந்த காளான், காளான் பவுடர் மற்றும் காளானிலிருந்து திரவத்தை பிரித்தெடுத்தல் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சொந்த முதலீட்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு அரசு முதலீட்டு மானியமாக ரூ.3.30 லட்சம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மதிப்புகூட்டப்பட்ட காளான் பொருட்கள் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்படி நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக தொழில் முனைவோருடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மொடக்குறிச்சி புஞ்சைலக்காபுரம் பகுதியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபணையற்ற புறம்போக்கு இடங்களில் வீடு கட்டியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுவது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.