நாகர்கோவில் மார்ச் 19
பாஜக சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளரும், பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதா விழிப்புணர்வு குழு உறுப்பினருமான சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வக்பு வாரியத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதன் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதால் தான். ஆனால் சிலர் அது குறித்து இஸ்லாமியர்களிடம் வேண்டும் என்றே விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக பாஜக சார்பில், வக்பு திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குழுவே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதுமே வக்பு சொத்துக்களில் பல்வேறு பிரச்னைகளும், அதன் மூலம் சட்ட சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன. இதைக் களையும் வகையிலும், வக்பு சொத்தில் வெளிப்படைத்தன்மையும், சமத்துவமும் ஏற்படுத்தவும் தான் திருத்த மசோதாவே கொண்டுவரப்பட்டுள்ளது. வக்பு சொத்துக்களின் மீதான திருத்தம் ஏன் தேவை என்பதற்கு நெல்லையில் நடைபெற்றிருக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை உதவியாளர் கொலை சம்பவமே சாட்சி!
திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் என்ற பிஜிலிபாய். ரமலான் நோன்பு காலமான இன்று அவர் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருக்கும்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்க மேற்கொண்ட முயற்சியே இந்த கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது. வக்பு சொத்து என்பதே இறைவனின் சொத்து ஆகும். முன்னோர்கள் தானமாக வழங்கிய நிலம் அது. அந்த சொத்தினை ஆக்கிரமித்திருப்பதற்கு எதிராக களம் ஆடியதாலேயே ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிலும் ஜாகீர் உசேன் தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்தும், தான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படும் அபாயம் இருக்கிறது என்பது குறித்தும் பலமுறை காவல்துறையினருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக அவரே பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதன் பின்னரும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் இப்பிரச்னையை சரியான முறையில் அணுகாமல், காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டதால் இன்று ஜாகீர் உசேன் படுகொலை சம்பவம் அரங்கேறிவிட்டது. இத்தனைக்கும் ஜாகீர் உசேன் தன் பணிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாதுகாப்பு பணி செய்தவர். அவருக்கே இதுதான் நிலமை! இதுதான் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கின் லட்சணம்!
இந்த படுகொலை சம்பவத்தைக் கண்டிக்கும் அதேநேரத்தில், வக்பு சட்டத் திருத்த மசோதாவின் தேவையையும் இனியேனும் அனைவரும் உணரவேண்டும். இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து முன்னோர்கள் தானமாக வழங்கிய நிலங்களை மீட்கும் முன்னெடுப்புதான் வக்பு திருத்த மசோதா என்பதை அனைவரும் உணர்வோம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



