சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் பல் வேறு கட்சியினர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது . மாநில இளைஞரணி பொறுப்பாளர் பிரம்மமூர்த்தி தலைமையில் இந்திய குடியரசு கட்சி, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2,000 பேர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.முன்னதாக சேலம் கந்தம்பட்டி பைபாஸ் முதல் இளம்பிள்ளை பஸ் ஸ்டாப் வரையில் 16 கிலோமீட்டருக்கு இரு பக்கங்களும் கட்சி கொடி மற்றும் பேனர்கள் மேலும் வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு ஆரத்தி எடுத்து மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின் விழா மேடைக்கு வருகை தந்த வேல்முருகனுக்கு மலர் தூவி வரவேற்றனர். மேலும், ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி செங்கோல் பரிசளிக்கப்பட்டது. கூட்டத்தில் தவாக தலைவர் வேல்முருகன் பேசுகையில், “தமிழக மக்கள் தமிழ் மொழியில் பேசுவதற்கு கூட தயாராக இல்லை. இதனால் தான், தமிழ் சமூகம் தனது வாழ்வுரிமையை இழந்து வருகிறது. சேலம் இரும்பாலை, வெள்ளி தொழில், ஜவுளி தொழில் போன்றவற்றில் வட மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழ் மொழி நமது உயிரை விட மேலானது. மொழிக்காக உயிர் நீத்த இனம் தமி ழினம். சினிமாவில் 55 வயதில் 19 வயது இளம் பெண்ணுடன் நடனமாடுபவர்கள், இந்த நாட்டிற்கு முதலமைச்சராக வேண்டும் என விரும்புகின்றனர்.நம் தாய் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்க நினைத்தால், கடந்த 1965ல் நடைபெற்ற போராட்டம் போல் மீண்டும் ஒரு போராட்டத்தை நாடு சந்திக்கும்,” என்றார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மோகன்ராஜ் செல்வகுமரன் சிலம்பரசன் மற்றும் மாரிமுத்து, விக்னேஷ், அருண்,கார்த்தி, வல்லரசு, வழக்கறிஞர்கள் கோபதி, கார்த்திகேயன், யோகேஷ், மனோஜ் பிரபாகரன், ராஜா, லோகேஸ்வரன் உட்பட 2000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



