வேலூர்=07
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, அவர்களும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வி.அமுலு விஜயன், அவர்களும் இன்று தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window Approach) வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID), பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறையின் மூலம் இலவச பஸ்பாஸ் மற்றும் இரயில்வே பாஸ் பதிவு செய்தல், மாவட்ட தொழில்மையம் மூலமாக வழங்கப்படும் பாரத பிரமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற திட்டங்களின்கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலமாக வங்கி கடன். கூட்டுறவு வங்கியின் மூலமாக வங்கி கடன் பெறுதல் (NHFDC), முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பல்துறை அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற முகாமில் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்து 593 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அரசின் அனைத்து துறைகளின் சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனர். இவற்றில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளும், 98 மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அடையாள அட்டை பதிவுகளும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,09,000/- வீதம் என மொத்தம் ரூ.3,27,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 3 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,800/- மதிப்பிலான சக்கர நாற்கலியும், 32 மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் இலவச பயணத்திற்கான அட்டைகளும், 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்வண்டியில் இலவச பயணத்திற்கான அட்டைகளும், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் நாற்காலி, காதொலிக்கருவி போன்ற உபகரணங்களை கோரி 40 பேருக்கு ALIMCO- Artificial Limbs Manufactuing Corporation Of india திட்டத்தின்கீழ் பதிவு என 276 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், பேர்ணாம்பட்டு ஒன்றியக்குழுத்தலைவர் சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் திருமதி பிரேமா, மாவட்ட ஊராட்சிக்குழுத்துணைத்தலைவர் கிருஷ்ணவேனி, நகர்மன்ற துணைத்தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமத், பேர்ணாம்பட்டு ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் லலிதா டேவிட், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார். கௌரி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.