அரியலூர், மே:22
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செந்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
ஆண்டிமடம் அருகேயுள்ள தில்லைநகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி செந்தில்செல்வம். மருதூர் கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம், வேலைக்குச் சென்ற இவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயற்சித்ததாக விழுப்புரம் மாவட்டம், ஆலந்தூர், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இசையாஸ் மகன் ஆமோஸ் பெர்னாண்டஸ்(25), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள பக்ரிபாளையம், சௌதாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன்(25) ஆகியோரை செந்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை செந்துறையிலுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வந்த நீதிபதி எஸ்.ஆக்னஸ் ஜெப கிருபா, குற்றவாளிகள் இரண்டு நபர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.