மயிலாடுதுறை, பிப்.21:
முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இளைஞர்களுக்கு நீதி கேட்டும், அப்பகுதியில் தொடர்ச்சியாக சாராய விற்பனை செய்வது தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெரம்பூர் காவல்துறையை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின்; கையை வெட்டிய கூலிப்படை கும்பலை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தவும், முட்டம் கிராமத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் தலைமை வகித்தார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை எம்.பி.அன்புச்செல்வன், பொன்னுதுரை, மகளிர் பொறுப்பாளர் தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்கள் கனிவளவன், அருளமுதன், மணல்மேடு பேரூர் உறுப்பினர் சத்யராஜ் மற்றும் செந்தில்குமார், சூரியமூர்த்தி, ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் இரா.முரளிதரன், தமிழர் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் சுப்பு.மகேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் குமார் நன்றி கூறினார்.