களியக்காவிளை, பிப். 14-
களியக்காவிளை அருகே மலையடி ஊராட்சிக்கு உள்பட்ட சாணி பகுதியில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இங்கு கடந்த சில நாள்களாக மின் விசிறிகள் இயங்கவில்லை. இதனால் அங்கு பயிலும் குழந்தைகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலரும் திமுக நிர்வாகியுமான அருள் சங்கர் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அங்கன்வாடி மையத்துக்கு வந்து விசாரித்த போது மின்வாரிய ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, சாணி அங்கன்வாடி மையம் உள்ளிட்ட மலையடி ஊராட்சியின் பயன்பாட்டில் உள்ள 10 மின் இணைப்புகளை ரத்து செய்து கணக்கை முடிக்க ஊராட்சி நிர்வாகத்தால் சில மாதங்களுக்கு முன் மின்வாரியத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 10 மின் இணைப்புகளுக்குமான மின்கட்டண நிலுவைத் தொகை உள்பட மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 16,477 ஐ ஊராட்சி நிர்வாகத்தால் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த இரு நாள்களுக்கு முன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால் அங்கன்வாடி மையத்தில் மின்விசிறி இயங்காமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.