தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் திட்ட செயல்பாடுகளை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கள் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் செயல்பாடுத்தப்பட்டு வருகிறது .இந்த திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி ,10 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 249 ஊராட்சிகளில் உள்ள 2,784 ஊரக குடியிருப்புகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 333 ஊராட்சிகளில் உள்ள 3, 947 ஊரக குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மக்கள் தொகையான 34. 75 லட்சம் பேருக்கு நாள் ஒன்றிற்கு 127. 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. வருகிற 2036 -ஆம் ஆண்டு 40.41 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் திட்ட பணிகளை ஒகேனக்கலில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சேகர், நிர்வாகப் பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சுந்தரபாண்டியன், நவீன் குமார், கோவிந்தப்பன், பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளி நாதன், சகிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



