நாகர்கோவில் பிப் 7
தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் இன்னல்கள், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனத்திற்கு வழங்கி வந்த மத்திய அரசின் நிதி குறைப்பு, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவி வழங்காமல் இருப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையை பின்வருமாறு :-
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியினை மத்திய அரசு குறைத்த காரணத்தால் ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறிப்பாக மீனவர் நலன் சார்ந்த திட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டம் மூலம் மீனவர்களுக்கு ஆதரவு எதுவும் கிடைக்காமல் உள்ளது. இதன் காரணமாக நிதி உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் இறங்கு தளங்கள் செப்பனிடப்பட்டு சீர் செய்யப்படாமல் உள்ளது. மீன்வளத்தையும், மீனவ கிராமங்களையும் பாதுகாக்க காலநிலையைத் தாங்கும் கரையோர மீனவக் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைக்கப்பட்ட திட்டம் செயலிழந்து காணப்படுவதால் மீனவ மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மீனவ கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் தேவை என ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



