குலசேகரம், ஜன- 24
குமரி மாவட்டத்தில் கட்டுமானத்திற்காக தினமும் கல்குவாரியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் கனிமவளங்கள் எடுத்துச் செல்வதற்கான அனுமதி சீட்டு வழங்குவதில் போலீசார் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளனர்.
கனிம வளங்களை வாகனங்களில் எடுத்து செல்ல ஒரு யூனிட் வாகனங்களுக்கு எடை மேடையில் எடை போடாமல் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனிமவளங்களை எடுத்து செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் எடைமேடையில் எடைபோட்டு சோதித்த பிறகு செல்ல வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சித்திரங்கோடு, குலசேகரம் சாலையோரம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.