குலசேகரம், ஜன- 22
குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). பெட்ரோல் நிலைய ஊழியர். இவரது மனைவி பிரவீணா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. ஜஸ்டின் பெற்றோர் அவர் சிறுவயதாக இருக்கும் போதே இறந்துவிட்டனர். ஜஸ்டின் தனது நண்பர் ஒருவருக்கு ரூபாய் 7 லட்சத்தை கடனாக வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை என தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரவீணா உடனடியாக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பிரவீனா குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.