சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா 07.12.2024 சனிக்கிழமை அன்று கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. சொ .வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஆர்.ராஜேந்திரன் B.A.,B.L., அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.கதிரேசன் Ph.D., அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத்தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் 2021-2024 ஆம் கல்வியாண்டில் பயின்ற 968 மாணவர்களுக்கும், முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. சொ.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது “அன்பிலே நண்பனை வெற்றி கொள், களத்திலே எதிரியை வெற்றிகொள், பண்பிலே சபையை வெற்றி கொள் ” என்ற கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப நல்ல கல்வியே நற்பண்புகளை வளர்க்கும், நற்பண்பே நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அத்தகைய நற்பண்பும், நல்வாழ்க்கையும் பெற கல்வியே பிரதானமாக இருக்கிறது. அத்தகைய கல்வியைப் பெற்ற மாணவர்களே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்சமுதாயத்தை உருவாக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.10000/- இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.7500/- மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.5000/- மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3000/- என மொத்தம் ரூபாய் 2,00,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக அளவில் உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் காட்சித்தொடர்பியல், நிதியியல் மற்றும் கணக்கியல், உளவியல்,கணிதவியல் ஆகிய துறை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து நான்காவது முறையும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த மாணவர்கள் , காட்சித்தொடர்பியல் மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் முதல் பத்து இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் நிதியியல் மற்றும் கணக்கியல், உளவியல் ஆகிய துறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது ஆகும்.
பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 43 மாணவர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் ரூ.2,00,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் தர வரிசையில் இடம் பெற ஊன்றுகோலாய் இருந்த துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மொத்தம் ரூபாய் 9,00,000 மாணவர்களுக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2021-2024 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றதுடன் பட்டம் பெற்ற மாணவர்களும் தனிச்சிறப்புடன் கூடிய முதல்நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது போற்றுதலுக்குரியது.
பட்டமளிப்பு விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் உறுதிமொழி வாசிக்க தாங்கள் கற்ற கல்வி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் என்றும் உறுதியுடன் செயல்படுவோம் என்று மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.