கிருஷ்ணகிரி ஆக 11: ஆடி மாதம் இந்துக்களின் புனிதமான மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தில் வரும் நாக பஞ்சமியில் நாகதேவரை வழிபடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நாகங்கள் இந்து மதத்தில் தெய்வீக சக்தியின் அடையாளமாக கருதப்படுவதால், நாக பஞ்சமி நாளில் நாக தேவரை வழிபடுவதால் நாக தோஷம் நீங்கி ஆரோக்கியம், செல்வம், செழிப்பு, போன்ற நன்மைகள் கிடைக்கும் என்றும், ஜோதிட சாஸ்திரத்தின் படி நாகதோஷம் இருப்பவர்கள் நாகபஞ்சமி நாளில் வழிபடுவதால் அதிலிருந்து விடுபடுவார்கள், என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆகவே இந்த நாகசதுர்த்தி, நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கோ ஆப்ரேட்டிவ் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு நாகம்மாள் திருக்கோயிலின் பதினெட்டாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளான வியாழக்கிழமை நாகம்மாளுக்கு 18ம் ஆண்டு நாகசதுர்த்தி நாகப்பஞ்சமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் அனுப்ஜை, கணபதி பூஜை, புண்ணியா வாசனம், பிரதான கலச ஆராதனை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நாகம்மாள் ஹோமம், சப்த கன்னி ஹோமம், பரிவார தேவதாஹோமம், பூர்ணாஹூதி, உள்ளிட்டவைகள் நடைபெற்றன பின்னர் பால்குட ஊர்வலமும், நாகம்மாளுக்கு பால் அபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்து பால், பழம், பூக்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து நைவேத்தியமாக படைத்து நாகம்மாளை தரிசனம் செய்து சென்றனர். பின்னர் இறுதியாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகர், கோ ஆப்பரேட்டிவ் காலனியை சேர்ந்த கோயில் தர்மகர்த்தா ராமன் மற்றும் குடும்பத்தினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.



