சென்னை, செப்.10
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து தொகுப்பூதிய அலுவலக பணியாளர்கள் சங்கம் சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எஃப். திட்டங்களை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பயணப்படி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், மாற்றுப் பணி வழங்கும்போது ஊக்கத்தொகை, ஓய்வூதியம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என சங்கத் தலைவர் இதயவேந்தன் வலியுறுத்தினார்.



