நாகர்கோவில், செப். 7:
குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேணாடு மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களின் பருவகால தலைநகராக விளங்கிய இரணியல், 16-ம் நூற்றாண்டு வரை அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக திகழ்ந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் படிப்புரம், பிரதான அரண்மனை, தர்பார் மண்டபம், வசந்த மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் உள்ளன. வசந்த மண்டபத்தில் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 8.5 அடி நீளமும், 4.5 அடி அகலமும் கொண்ட மன்னரின் கட்டிலும் அமைந்துள்ளது.
நீண்டகாலமாக பராமரிப்பின்றி இருந்ததால் அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. இதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரண்மனையை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமான நிலையில், 2022-ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் தொடங்கின.
பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்புக்கட்டி கலவை பயன்படுத்தப்பட்டு ராஜபாளையம் செங்கற்களைக் கொண்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேக்குமரக் கதவுகள் அமைத்தல், மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்றன. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 85 ஆயிரம் ஓடுகள் கொண்டு வரப்பட்டு அரண்மனையின் மேற்கூரையில் பதிக்கப்பட்டுள்ளன.
மரவேலைகள் மற்றும் ஓடுகள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரண்மனையை சுற்றி 6 அடி அகல நடைபாதை அமைத்தல், அதன் மீது கூரை அமைத்தல், உள்பகுதியில் உள்ள சிறிய குளத்திற்கு கூரை அமைத்தல், மன்னர்கள் ஓய்வெடுக்கும் பின்பகுதியை புனரமைத்தல், முன்புற நுழைவாயிலுக்கு கூரை அமைத்தல் மற்றும் அரண்மனை சுவர்களுக்கு பூச்சு வேலை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவு பெற வேண்டியுள்ளது.
கலைநயமும் நுட்பமான வேலைப்பாடுகளும் கொண்ட இந்த பணிகளை முழுமையாக நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் தற்போது முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இரணியல் அரண்மனை புனரமைப்பு முழுமையாக நிறைவு பெற்றால், அது சுற்றுலா மற்றும் வரலாற்று ஆய்வுக்கான முக்கிய தலமாக உருவாகும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, எஞ்சியுள்ள புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



