பரமக்குடி: செப்.07.
சுதந்திரப் போராட்டத் தியாகி ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் பரமக்குடி ஒன்றியம் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர் மதனை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து அவர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் பேசிய மாவட்டக் கழகச் செயலாளர் மதன், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய மாபெரும் தேசபக்தர் வ.உ.சிதம்பரனார். சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களின் வணிக ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த அவரது தியாகமும், நாட்டுப்பற்றும் தமிழர்களின் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது. தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அவர்,” எனப் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



