திருப்பத்தூர்: ஆக.25.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் – சத்தியா தம்பதியரின் 6 வயது மகன் பலூன் விழுங்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் தங்களது தொழிலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தபோது, சிறுவனின் தொண்டையில் பலூன் சிக்கியிருந்தது தெரியவந்தது. பலூன் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களுக்கு பலூன் உள்ளிட்ட சிறிய பொருட்களை வழங்கும்போது பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.



