கிருஷ்ணகிரி, ஆக.22:
ராயக்கோட்டை அருகே எச்சம்பட்டி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுவழிப்பாதை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எச்சம்பட்டி, எத்தனஅள்ளி உள்ளிட்ட கிராம மக்கள், சிங்கேரியம்மா கிணறு பள்ளத்தில் இருந்து போடம்பட்டி சாலை வரை உள்ள அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் பொதுவழி அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது ஓடை புறம்போக்கு நிலத்தை முறையாக அளவீடு செய்யாமல், விவசாயி முனுசாமியின் பட்டா நிலத்தை மட்டும் அளவீடு செய்ததாக அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுவழி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சில தனிநபர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்றாமல் பட்டா நிலத்தை மட்டும் அளவீடு செய்து கற்கள் நடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். கோழிப்பண்ணைக்கான மின்சார இணைப்பை துண்டிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, அரசு ஓடை புறம்போக்கு நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கான வழிப்பாதை அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



