திருவள்ளூர், ஆகஸ்ட் 4 –
போதை இல்லாத பாரதத்தை உருவாக்கும் உன்னத நோக்கோடு, இந்திய அளவில் ஆகஸ்ட் 6 முதல் 20 தேதி வரை 10 கோடி மக்களை சந்தித்து போதை விழிப்புணர்வு வழங்கும் நாடளாவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரியில் மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களிடையே போதை விழிப்புணர்வு குறித்த சிறப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அந்த உறுதிமொழியின் முக்கிய அம்சங்கள்:
* போதை விலகல்: அனைத்து விதமான போதைப் பழக்கங்கள் மற்றும் அடிமைத் தளங்களில் இருந்து முழுமையாக விடுபடுதல்.
* ஆரோகியமான வாழ்க்கை: ஆரோக்கியமான நற்பண்புகள் சார்ந்த மற்றும் நேர்மையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல்.
* சமுதாய விழிப்புணர்வு: எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தை போதையில்லா வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துதல்.
* தேச வளர்ச்சி: எனது நேரம், ஆற்றல், திறமைகள் மற்றும் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, போதை இல்லாத ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நேர்மையான பங்களிப்பை வழங்குதல்.
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட பிரம்ம குமாரிகள் பொறுப்பாளர் சகோதரி ஜெயலட்சுமி, வெங்கடேஸ்வரா கல்லூரி தலைவர் புருஷோத்தமன், செயலாளர் நந்தகுமார் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



