தேனி, ஆக. 4 –
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து (04.08.2026) தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், உத்தமபுரம் திட்டப்பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 336 (G+2) அடுக்குமாடி குடியிருப்புகள், தேனி வட்டம் கோட்டூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தலா ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தரத்தில் சிறப்பு திறன்மிகு மையக் கட்டடங்களைக் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, உத்தமபாளையம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் செயற்பொறியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) கதிரேசன், வருவாய் கோட்டாட்சியர் (உத்தமபாளையம்) சையது முகைதீன் இப்ராஹிம், மண்டல மேலாளர் (IOB) சந்திரகுமார், உதவி செயற்பொறியாளர் வளர்மதி, வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம், உதவிப்பொறியாளர் ஆனந்தகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



