நாகர்கோவில், ஜூலை 25 –
கன்னியாகுமரி மாவட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று 25ம் தேதி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின் (நாகர்கோவில்), தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), செல்லசாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 864 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
குமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருந்தவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாக்களும், சிங்காரவேலர் திட்டத்தின் கீழ் 91 மீனவர்களுக்கும் வீட்டுமனை பட்டாக்களும், சமூக நீதித்துறை சார்பில் 92 பேருக்கு இ-பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 மீனவர் கிராமங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்காரவேலன் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பட்டா கிடைக்காத மீனவர்களுக்குப் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமூக நலத்துறை சார்பில் 482 மகளிருக்கு விலையில்லாத் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 671 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்றைய தினம் 2306 பயனாளிகளுக்கு ரூ.6.73 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அனைத்துத் திட்டங்களும் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுதொகை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) எம்.மேரி பிரின்சி லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது எஸ்.காளீஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



