புதுக்கடை, ஜூலை 24 –
புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (55). மீனவர் ஆன இவர் வள்ளத்தில் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுதன் (39). இவர் ஸ்டீபனுடைய வள்ளத்தில் தொழில் செய்ய கேட்டுள்ளார். அதற்கு ஸ்டீபன் தற்போது ஆள் தேவையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ஸ்டீபன் மற்றும் இனயம் பகுதி சேர்ந்த அவரது நண்பர் ரூபன் (43) ஆகிய 2 பேரும் புதுக்கடையில் உள்ள அரசு டாஸ்மாக் பாரின் உள்ளே மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சுதன் திடீரென ஸ்டீபனை தாக்க தொடங்கினார். மேலும் பீர் பாட்டிலை உடைத்து ஸ்டீபன் உடலில் பல்வேறு இடங்களில் குத்தி காயப்படுத்தினார். இதை தடுக்க முயன்ற ரூபனையும் பீர் பாட்டிலால் பல்வேறு இடங்களில் குத்தி காயப்படுத்தி உள்ளார். தொடர்ந்து தடுக்க முயற்சித்தவர்களையும் பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டீபன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ரூபன் குழித்துறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


