மதுரை, ஜூலை 21 –
திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றிப் புகழப்படும் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. காலை 8:15 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் மங்கல இசையுடன், தங்கக் கொடிமரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தோரண மாலைகள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
திருவிழாவின் முக்கிய வாகனச் சேவைகளாக, இன்று இரவு அன்ன வாகனத்திலும், நாளை (ஜூலை 22) காலையில் தங்கப் பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்திலும் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளிப் புறப்பாடு நடைபெறுகிறது. ஜூலை 23 அன்று இரவு அனுமார் வாகனத்திலும், ஜூலை 24 அன்று இரவு கருட வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார். ஜூலை 25 அன்று காலை 7:30 மணிக்கு மேல் 8:10 மணிக்குள் சுந்தர்ராஜ பெருமாள் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்குத் தங்கப் பல்லக்கில் எழுந்தருளுகிறார்; அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து ஜூலை 26 அன்று இரவு மோகினி அவதாரத்திலும், அதனைத் தொடர்ந்து யானை வாகனத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். ஜூலை 27 அன்று இரவு புஷ்ப சப்பரத்திலும், ஜூலை 28 அன்று இரவு குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூலை 29-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 7:05 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், அன்றைய தினம் இரவு புஷ்பப் பல்லக்கு சேவையும் நடைபெறும்.
மேலும், அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் வழக்கமாக நடைபெறும் ஆடிப் பௌர்ணமி படி பூஜை, இந்த ஆண்டும் ஆடித் தேரோட்டத்தன்று மாலையில் நடைபெறுகிறது. அன்று திருக்கதவுகள் திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படி பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டுச் சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 30 அன்று தீர்த்தவாரியும், ஜூலை 31 அன்று உற்சவ சாந்தியும் நடைபெறும்.
இத்திருவிழாவின் நிறைவாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசையன்று கருட வாகனப் புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.



