நாகர்கோவில், ஜூலை 16 –
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ளது. இந்த கல்லூரியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த மருத்துவ முறைகளால் அறுவை சிகிச்சை இல்லாமல் நோய்களை சரி செய்ய முடியும். நோய்கள் வந்த பிறகு குணப்படுத்துவதை விட, நோய் வருவதற்கு முன்பே ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்வது ஆயுளை நீட்டிக்க உதவும். இதற்கு ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் பெரும் பங்காற்றுகின்றன.
இந்த கல்லூரியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவியைப் பெரும் பொறுப்பாகக் கருத வேண்டும். உறுப்பினர்கள் தங்களின் தலைமை பண்பை வளர்த்து கொள்வதோடு, மாணவர்களின் நலனை ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக செயல்பட வேண்டும். மருத்துவர்களாகிய நீங்கள் நோயாளிகளிடம் அன்பாகவும் கனிவாகவும் உரையாடும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும் தாண்டி பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களும் ஆர்வமுடன் கல்வி கற்க வருகிறார்கள். அனைவரும் அலோபதி மருத்துவத்திற்கு இணையாக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் சிறந்து விளங்க வேண்டுமென கேட்டுகொள்வதோடு, இப்பாரம்பரிய கல்லூரியில் பயில்வது ஒவ்வொருவருக்கும் பெருமையென உணர்ந்து சிகிச்சை முறையினை மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரி முதல்வர் மரு.கிளாரன்ஸ் டேவி, கல்லூரி மருத்துவர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



