தருமபுரி, ஜூலை 9 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்த முகாமுக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு ரூ.4 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு ரூ.1.82 லட்சத்தில் இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவித்தொகை, உணவுப் பொருள் வழங்கள் துறையின் சார்பின் 47 பேருக்கு ரூ.7.56 லட்சத்தில் மின்னணு குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ.16 லட்சத்தில் வீட்டு வசதி திட்டத்தின் நல திட்ட உதவிகள் உட்பட 114 பேருக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு துறைகளில் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்.
இந்த முகாமில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



