மார்த்தாண்டம், ஜூலை 6 –
தக்கலை அடுத்த புலிப்பனம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பென்னட். இவர் பூவன்கோடு பகுதி சேர்ந்த டாக்டர் ஸ்டாலின் ஜோஸ் என்பவருக்கு ரூ 10 லட்சம் கடனாக வழங்கினார். இதற்கு ஈடாக ஸ்டாலின் ஜோஸ் 10 லட்சத்துக்கான காசோலை ஒன்றை ஜார்ஜ் பென்னட்டிடம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் காசோலையை ஜார்ஜ் பென்னட் வங்கியில் செலுத்திய போது போதிய பணம் இருப்பு இல்லை என திரும்பி வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த ஜார்ஜ் பென்னட் இது குறித்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பத்மநாதபுரம் நீதித்துறை நடுவர் கோகிலா விசாரணை முடிந்து தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ஸ்டாலின் ஜோஸ் – ஐ மாற்றுமுறை ஆவண சட்ட பிரிவு 138 கீழ் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், புகார்தாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் இழப்பீட்டை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


